ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

சொல்லடீ சக்தி…




இன்றோடு இன்றோடு என் சோகம் யாவும்......
உன்னிடம் கொட்டினேன் உதவவும் வேண்டும்......
என்னோடு உறவாடும் என் கூட்டின் மிருகம்......
தெய்வங்கள் ஆகிட வழிகாட்டு நீயும்......

அறியாமைக் கடலுக்குள் மூழ்காமல் நானும்.....
போராடிப் போராடிக் கரையேற வேண்டும்.....
இருளுக்குள் எனைத் தள்ளிப் பெருங்கூச்சல் போடும்.....
இச்சைகள் காற்றோடு கற்பூரமாகும்.....

பிறவியின் புனிதத்தைத் தொலைத்தது தீது!
மோட்சமும், முக்தியும் இனியெனக்கேது?
என் விதி கண்டு நீ மனமிரங்கக்கால்,
கொளுத்திடு தீமையின் வேரையும் சேர்த்து…..

இது நாடல்லக் காடென்று கூறுவேனாகில்,
தன் இனம் காத்திட மற்றொன்று உதவும்...........
விலங்கிலும் கொடியதாய்த் தன்னதை மாய்க்கும்,
மானுடம் எவ்வழி மேன்மையைக் காணும்?????

குழந்தைகள் வீதியில் அலைதலைக் கண்டும்,
பிணங்களைக் குவித்திடும் தலைவர்கள் ஆளும்,
நாடுகள் எப்படி மேலானதாகும்??? - இது
கலியல்ல கலிக்கும் ஏழரைச்சனி பிடித்த காலம்…….

இருளிலே தவித்ததாம் பூலோகம் என்று
விடுவிக்க வந்ததாம் பன்றியும் ஒன்று!
அரசியற் சாக்கடையில் புரளுதடி உலகம்........
உன் பலம் அறிய அடியேற்கு இது தக்க தருணம்!

வெகுளாதே சக்தி நீ வெகுளுதல் நியாயம்….
ஆனாலும் நம் நாட்டின் நிலைமை பாரதூரம்
செவிசாய்ப்பாய் நீ, எந்தன் அறிவுரைக்கல்ல
அடியேன் நான் அறிந்தது செய்திகளின் ஆழம்…..

உனதண்ணன் சூளுரைத்துக் கிளம்புவானாகில்
பொறுக்கச்சொல், துணையின்றி மீளுதல் கடினம்…..
தலை சீவித் தரை வீழ்த்தும் போரல்லத் தாயே -  இஃது
உறவாடிப் பகை தீர்க்கும் பாவிகள் உலகம்.

கூசாமல் பொய் பேசித் தம் வசப்படுத்தி, நாட்டின்
ஆட்சியில் பங்களித்துக் கூட்டாளியாக்கி,
ரத்தத்தைத் தீர்த்தமென்றும், பிணங்களைப் படையலென்றும்
நம்பவைத்துக் கழுத்தறுக்கும் சகுனிகளும் சேர்த்தி….

திரிசூலம் இருக்குதென்று இறுமாந்திருப்பாய், அது
உனதல்லத் தனதென்று வழக்காடி ஜெயிப்பர்!
கூண்டினுள் அடைபடுவாய்! சொல்லொணாத் துயர் படுவாய்!
பாவி நீ பெண்ணாகப் பிறந்ததையே நொந்திடுவாய்

ஓடாதே ஓடாதே நில்லடி சக்தி,
நீ கண்ட வழியொன்று, வேறென்ன? பக்தி……
பக்தியால் ஆவதென்ன? புரியவில்லை சேதி……
சொல்லிவிட்டு ஓடலாம், நில்லடி சக்தி….

மன்றாடி மன்றாடி உனைக் கேட்டேன் நீதி......
வீணிலே சாகுமோ மானுடச் சாதி?
ஓம் சக்தி ஓம் சக்தி சக்தியென் சக்தி.....
பக்தி தான் ஈயுமோ சன்மார்க்க முக்தி?

தீது கண்டு வாடாமல் விழியிரண்டு மூடி.....
இயலாமை மறைக்க மற்றவரைச் சாடி.....
நிலையற்ற செல்வத்தை நாள்தோறும் தேடி.....
வாழுதல் பக்தியால் நெறியாகுமோடி?

2 கருத்துகள்:

இர.கோகுலன் சொன்னது…

தரமான ஆக்கம்.... தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகள்.....

அமிழ்தினி சொன்னது…

நன்றி நண்பாரே!!!