புதன், 25 ஜனவரி, 2012

வாய் திற சீதா....

வாய் திற சீதா...
உன் உற்றவன் புகழைச் சரித்திரங்கள் எல்லாம் வாய் கிழியப் பாடியது இன்னமுமா போதவில்லை??? உன் பக்கத்து நியாயங்களையும் கேட்டுவிடுவோம்... இப்போதாவது வாய் திற....
ராமனைக் கைத்தலம் பற்றி நீ மிதிலையை நீங்கையில், வில்லாய் வளைந்து கொடுக்கச் சொன்ன உன் தந்தையை நீ கேட்கவில்லை.. ''சிவதனுசையே உடைத்தவன் கையில் நானும் வில்லாகவோ?????'' என்று.... அன்று தொடங்கியது உன் ஊமைப் பயணம்....
உடன் பிறந்த தம்பியையும் உடையவளாய் உன்னையும் உடனழைத்துச் சென்ற உன் கணவன் உத்தமன்.... அவனைப் பின் தொடர்ந்த நீ பத்தினி....ஆனால் தானும் உடன் வருவேன் என்ற ஊர்மிளையை உறுதியாய் மறுத்துத் தான் மட்டுமாய் காடேகிய இலக்குவனோடு ஒத்தால் உயர்ந்து நிற்கும் உன் கணவனின் உயரம் அரை இஞ்சி குன்றி விடாதா????
அரக்கி என்றும், நயவஞ்சகி என்றும், பிறன் மனை விளைந்தாள் என்றும் சூர்ப்பனகையைக் குற்றவாளியாக்கினான் உன் கணவன்.... குற்றத்தைச் சுட்டிக் காட்டலாம், ஆனால் நீதிபதியாய் இருந்து தண்டனையை நிறைவேற்ற உன் கணவன் ஒன்றும் அயோத்தியின் மன்னன் அல்லவே??? வெறும் காட்டைச் சுற்றும் யாத்திரீகன் தானே???அவனோடு சேர்ந்த இலக்குவனும் அன்றோ தாழ்ந்து போனான்???? ஒரு பெண்ணாய் இருந்து நீ இன்னொரு பெண்ணின் அவமானத்தைக் கூட சகித்தாக வேண்டுமா சீதா??? மிதிலையிலே வார்த்தைகளுக்கா பஞ்சம்??? அகப்பட்டவள், தூதுவனாய் வந்தவன் உன் மணவாளனின் அரக்கனிடம் கணையாழியைக் காட்டியபோதும் அவனோடு ஏன் செல்ல மறுத்தாய்??? உன் கணவனின் வீரத்துக்கு இழுக்கு என்று நினைத்தாயோ??? உன்னைச் சிறைப் பிடித்தவன் அரக்கனாகவே இருந்திருந்தால் உன் ராமநாம ஜெபம் உன் பெண்மையைக் காத்திருக்குமா????

தூதுவன் அந்த வாயுபுத்திரனுக்கு இலங்கையையே தீக்கிரையாக்குமளவிருந்த கோபத்தின் நூறில் ஒரு பங்கு உன் கணவனுக்கிருந்திருந்தால் '' இன்று போய் நாளை வா....'' என்பானா???? உன் கற்பு ஊசலாடுகையில் தன வீரத்தைப் பறைசாற்றியவனின் வீரச் சரித்திரத்தைத் தானே நாங்கள் கேட்டோம்??? நீ அப்போதேனும் வாய்திறந்தாயா????

'' நீ மட்டுமா தனித்திருந்தாய்??? அவனும் தானே துணியை நீங்கியவன்??? '' என்ற வழமையான வாதங்கள் வலுவற்றன தான்.... அவன் தான் மாற்றாந்தாயால் வலிக்க வலிக்கச் சூடு கண்டவனாயிற்றே??? இன்னொரு பெண்ணைக் கனவிலேனும் தீண்டுவானா???? ஆனாலும் உன் உடலைத் தீண்டாத தீ உன் உள்ளத்தைத் தகிக்கவில்லையா??? அண்ணனின் இழிசெயலால் மூண்ட சினத்தைக் கொண்டே தீயை மூட்டுவித்த ஒரு உத்தமனிச் சந்தேகித்த பாவத்தின் பலன் என்றெண்ணித் தான் தீயிடைப் புகுந்தாயோ???

போகட்டும் எல்லாம் போகட்டும்... எவனோ ஒருவன் எதோ உளறினான் என்பதற்காய் உன்னை மீண்டும் காடுபுகச் சொன்னான் என்பதுதான் நம்பும்படியாக இல்லை... நீயே சொல்.... உண்மையைச் சொல்... ஊரறிய ஒருமுறையும் தனிமையிலே பலமுறையும் உனக்குத் தினம் தினம் அக்கினிப் பிரவேசம் தானா பெண்ணே???? பொறுக்காமல் தான் ஆசை என்ற போர்வையிலே காடேகினாயா??? உன்னை வேவு பார்க்கத் தான் தம்பியையே தேரோட்டியாக்கினானோ???

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.... வண்ணான் பேச்சின் பரிசு தான் வனவாசம் எனில் அவன் உன்னைத் தன் வாரிசுகளைப் பெற்றுப் போடும் கருவியாகக்கூட மதிக்கவில்லையே சீதா??? நிறைமாதக் கர்ப்பிணி நீ??? பிரசவம் பற்றி நீ என்னதான் அறிந்திருந்தாய்??? ஜன்னி கண்டு நீ செத்தே போயிருந்தால் அவன் ஏற்றிய அந்த சுமைகளின் கதி என்ன????

சிவதனுசை ஒற்றைக்கையால் ஏந்தியவள் நீ.... உன்னை ஊமையாக்க யாரால் இயலும்???? இத்தனையும் செய்துவிட்டு உத்தமன் போர்வை போர்ப்பவனிடம் என்ன பேசி என்ன பலன் என்று தான் மௌனம் காத்தாயோ????

இலங்கையாண்ட தமிழனை அசுரனாக்கிய இந்திய இரத்தம் தானே உன் உடம்பிலும்???? நீ ஊமையாயிருப்பதே நலம்...........